2026 தேர்தலில் திமுகக்கு முழு ஆதரவு – தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் அறிவிப்பு
சென்னை, ஏப்ரல் 17: தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கும் பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அரசுக்கு, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் தனது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் நிறுவனத் தலைவர் டாக்டர் எப். சையந் திலாவர் அலி இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பாராட்டு தெரிவித்தார். குறிப்பாக கல்வி உதவித்தொகைகள், கல்விக் கடன்கள், வக்ஃப் நிர்வாக மேம்பாடு, உலமாக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய உயர்வு, பொருளாதார உதவிகள், கல்லறைத் திடல்கள் மற்றும் சமூக வசதிகள் போன்ற பல திட்டங்கள் சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், உமீத் சட்டத்திற்கு எதிராக ஒன்றிய அரசை கடுமையாக எதிர்த்து, முஸ்லிம் சமூகத்திற்கு பக்கபலமாக செயல்பட்டு வரும் தமிழக முதல்வருக்கு ஜமாத் சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில அரசிடம் சில முக்கிய கோரிக்கைகளையும் ஜமாத் முன்வைத்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், உருது மொழியை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தில் உள்ள வக்ஃப் சொத்துகளில் பெரும்பங்கு தர்காக்களைச் சார்ந்திருப்பதால், அவற்றை பராமரித்து மேம்படுத்த தனி வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிற்பட்டோர் நலத்துறையின் சலுகைகள் அனைத்து முஸ்லிம்களுக்கும் சமமாக சென்றடைகின்றனவா என்பதை கண்காணிக்க அதிகாரி நியமிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1967-க்கு முன்பு இருந்த சுமார் 2000 உருது பள்ளிகளில் பெரும்பாலானவை தற்போது மூடப்பட்டுள்ளதால், அவற்றை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிறுபான்மை நலத்துறைக்கு தனி அரசு செயலாளர் நியமிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அதேபோல், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பக்கீர்மார்களுக்கு 60 வயதுக்கு மேல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் ஜமாத் வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத், வரவிருக்கும் தேர்தலில் திமுக அரசுக்கு உறுதியான ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளது.
****
