தி.மு.க. அரசுக்கு எதிராக நாடார் சமுதாயம் கடும் கண்டனம் – 2026 தேர்தலில் அரசியல் முடிவு அறிவிப்பு
சென்னை, ஏப்ரல் 16, 2026: தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பில் இன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் சந்திப்பு அரங்கில் நடைபெற்ற பிரஸ் மீட்டிங்கில், மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளும் அரசியல் நிலைப்பாடுகளும் வெளிப்படுத்தப்பட்டன.
இந்த சந்திப்பில் நிறுவனத் தலைவர் ஆர். சந்திரன் ஜெயபால், பொதுச் செயலாளர் வி. ஜாண் கிறிஸ்டோபர், கூடுதல் பொதுச் செயலாளர் கே.சி. ராஜா, பொருளாளர் எம்.ஆர்.ஆர். குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Press meet Youtube Video link:
பெருந்தலைவர் காமராஜரும் நாடார் சமுதாயமும் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் முக்தார் அகமது மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாடார் சமுதாயம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், அவை மதிக்கப்படவில்லை என அமைப்பு குற்றம் சாட்டியது. அதற்கு பதிலாக முக்தார் அகமதுக்கும் அவரது வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதை அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
மேலும், நாடார் சமுதாயத்தின் கோரிக்கைகளை புறக்கணித்ததாகக் கூறி, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை தோல்வியடையச் செய்யும் பணியில் சமூகத்தினர் ஈடுபடுவார்கள் என தெரிவித்தனர். தி.மு.க.வுக்கு இனி நாடார் சமுதாய வாக்குகள் கிடையாது என்றும் கூறப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி கே.பி.கே. ஜெயகுமார் படுகொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததை சுட்டிக்காட்டிய அவர்கள், இந்த வழக்கில் ஆளும் கட்சியுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் வெளியிட்டனர்.
மேலும், சிறுபான்மை கிறிஸ்துவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஜெயகுமார் கொலையில் குற்றவாளிகளை கண்டறியாதது, சிறுபான்மை கிறிஸ்துவர்களை அரசு புறக்கணிக்கிறது என்பதற்கான சான்று என அவர்கள் கூறினர். இதன் விளைவாக, 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான நிலைப்பாடு உருவாகும் என்றும் தெரிவித்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் போராட்டங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் உயிரிழந்ததற்கும், தற்போதைய வாழ்வாதார பாதிப்புகளுக்கும் தி.மு.க.வே காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர். தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
அதேபோல், நாங்குநேரி இரட்டை கொலை, தென்காசி மாவட்டத்தில் தொழிலாளி மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்கள் தேர்தல் ஆதாயத்திற்காக சாதி மோதல்களை தூண்டியதன் விளைவுகள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த அனைத்து நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு, நாடார் சமுதாயம் தங்களை பாதுகாக்கும் நோக்கில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
****
