ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் மே 20 அன்று தமிழகம் முழுவதும் மருந்தகங்கள் கடையடைப்பு போராட்டம்
சென்னை, மே 19, 2026: தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில், அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் அறிவுறுத்தலின்படி, வருகின்ற மே 20, 2026 புதன்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் முழு மருந்தக கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, ஆன்லைன் மருந்து விற்பனை காரணமாக பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு, சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் மற்றும் போலி மருந்து விற்பனை போன்ற பல்வேறு பிரச்சினைகள் தீவிரமடைந்து வருவதாக தெரிவித்தனர்.
Press meet Youtube Video link 👇
சங்கத் தலைவர் A. Ramesh, பொதுச் செயலாளர் G. Ashok, பொருளாளர் M. Ganesa Moorthy, நிர்வாகச் செயலாளர் S. Elangovan மற்றும் AIOCD ஒருங்கிணைப்பாளர் M. Arul Kumar உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்
மருத்துவர் பரிந்துரை சீட்டு மற்றும் மருந்தாளுநர் மேற்பார்வை இன்றி நடைபெறும் ஆன்லைன் மருந்து விற்பனையால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. குறிப்பாக வலி நிவாரணி, தூக்க மாத்திரைகள் மற்றும் Schedule-H1, NDPS வகை மருந்துகள் கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுவது இளைஞர்களை பாதிக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கு பயன்படும் உயிர்காக்கும் மருந்துகள் தரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவது, காலாவதியான மருந்துகள் விநியோகம் செய்யப்படுவது மற்றும் போலி மருந்துகள் ஆன்லைன் தளங்கள் மூலம் பரவுவது குறித்து கடும் கவலை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து வணிகர்களும், நாடு முழுவதும் சுமார் 12.5 லட்சம் மருந்து வணிகர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
மே 20 அன்று அவசர மருத்துவ தேவைகளுக்காக அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 24 மணி நேர மருந்தகங்களை மட்டும் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய மருந்துகளை மே 19-ஆம் தேதிக்குள் வாங்கி வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுகளுக்கு எச்சரிக்கை
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு நிரந்தர தடை விதித்து, மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், அடுத்த கட்டமாக காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
****
