UATT 2.0 அரசாணைகள் ரத்து செய்யக் கோரி தோட்டக்கலை அலுவலர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

சென்னை, டிசம்பர் 30, 2025: தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கம் (தலைவர் திரு. சிவக்குமார்) மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் (தலைவர் திரு. முருகன்) இணைந்து, உழவர் அலுவலர்கள் தொடர்புத்திட்டம் UATT 2.0 தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைகளை ரத்து செய்யக் கோரி, இன்று சேப்பாக்கம் எழிலகம் பின்புறம் அடையாள ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

UATT 2.0 அரசாணைகள் ரத்து செய்யக் கோரி தோட்டக்கலை அலுவலர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

இந்த அமைதியான ஜனநாயகப் போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். UATT 2.0 தொடர்பான அரசாணைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 20.11.2025 அன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 22.12.2025 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குநரகத்தில் மாநில அளவிலான மாபெரும் பெருந்திரள் முறையீடும் அமைதியான சட்டப்பூர்வ முறையில் நடைபெற்றது.

Press meet Youtube Video link 👇 

இருப்பினும், மேற்கண்ட ஜனநாயக நடவடிக்கைகள் எதுவும் இதுவரை அரசின் கவனத்திற்கு உரிய பதிலைப் பெறாத நிலையில் தொடர்கின்றன. நிர்வாக வசதியை மட்டுமே முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், தோட்டக்கலை விவசாயிகளின் வாழ்வாதாரம், துறை வளர்ச்சி மற்றும் அலுவலர் நலன் ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும் அபாயம் உள்ளதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக, UATT 2.0 தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைகளை உடனடியாக திரும்பப் பெறக் கோரி, 30.12.2025 முதல் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுவதுடன், அதனைத் தொடர்ந்து காத்திருப்பு போராட்டமும் அமைதியான ஜனநாயக முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

****