பேக்கிடெர்ம் டேல்ஸின் 5 புத்தகங்கள் சிறப்பு விருந்தினர்களுடன் வெளியீட்டு விழா


                     
29/12/2023 அன்று கே கே நகரில் உள்ள ஐயப்பன் சாஸ்தா கோவிலில் பேக்கி டெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் புத்தக வெளியீட்டு விழா வனஜா முத்துக்ருஷ்ணன்,ஜெயந்தி பத்ரி அவர்கள் பாடிய இறை வணக்கத்துடன்ஆரம்பித்தது. விழா தலைவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று குத்து விளக்கு ஏற்றி பின்னர் ருக்மணி வெங்கட் வரவேற்புரை அளித்தார். ஜெயந்தி பத்ரி,பார்வதி நாகமணி இருவரும் விருந்தினர்க்கு மரியாதை செய்தனர்.
முகிழ்நகை, காவிய நாயகிகள், கசங்கிய காகிதம், கவின் கலைகள், கண்ணாடி  ஆகிய ஐந்து புத்தகங்கள் திரு ஜே.கே.சிவன், எழுத்தாளர் வேதா கோபாலன், முனைவர் ஜெயந்தி நாகராஜன், திரு கணேஷ் பாலா, திரு புருஷோத்தமன்     ஆகியோர் தலைமையில் வெளியிடப் பட்டன.

Youtube video link 👇 

ஒவ்வொருவரும் அனைத்து எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது கதைகளைப் பற்றியும் விரிவாகப் பேசி பாராட்டியது எங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. எழுத்துக்களிலே நகைச்சுவையாக எழுதுவது தான் மிகவும் கடினம். வாழ்க்கையில் கடைசிவரை ஓய்வில்லாமல் இருப்பது எழுதுவது மட்டுமே என்றும் இணைந்த கைகள் என்ற குழுவில் “முகிழ் நகை” புத்தகத்தில் அனைவருமே நகைச்சுவையாக அருமையாக எழுதி இருக்கின்றனர் என்று நகைச்சுவை எழுத்தாளர் கணேஷ் பாலா பேசியது மனதைக் கவர்ந்தது..


காவிய நாயகிகளைப் பற்றி ஒவ்வொரு எழுத்தாளர்கள் எழுதிய விதத்தையும் அவர்களது சிறப்பைப் பற்றியும் பேசிய திரு சிவன் அவர்களின் பேச்சு அந்த நாயகிகள் இருந்த அந்த காலத்துக்கே இழுத்துச் சென்றது. எழுத்தாளர்  வேதா கோபாலன்  “கண்ணாடி“ மற்றும் “கவின்கலைகள்” புத்தகத்தில் எழுதிய நமது பாரம்பரிய கலைகள் பற்றி பேசும் போது நம்மை அந்தக் கலைக்குள்ளே போய் அதிசயிக்கச் செய்தது.

முனைவர் ஜெயந்தி நாகராஜன் அவர்கள் பாடியப் பாட்டும் பேசிய பேச்சும் மனதை கொள்ளை கொண்டது. அடுத்து திரு புருஷோத்தமன் அவர்கள் விளையாட்டுத்துறை பற்றியும் காவிய நாயகிகளைப் பற்றியும் அழகாக எடுத்துரைத்தார்.

எழுத்தாளர் பார்வதி நாகமணி இந்த விழாவைப் பற்றி கவிதை சொல்ல, எழுத்தாளர்கள் வசந்தி ஜனார்த்தனன்,ப்ரபா கிரி விழாவைத் தொகுத்து வழங்க, அஷ்ட லக்ஷ்மிகுழுவும் இணைந்த கைகள் குழுவும் ஒற்றுமையாக கூட எழுத்தாளர் உஷா கண்ணன் எல்லோருக்கும் நன்றி சொல்லி விழாவினை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஒற்றுமையாக விழாவைச் சிறப்பித்ததோடல்லாமல்  ஆசையாக வெகு நாள் பழக்கம் போல் அன்புடன் பழகியது கூடுதல் சிறப்பு.

****

Recent Posts