பெட்ரோல் - டீசல் - எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக டிசம்பர் 10 மாநிலம் முழுவதும் பத்து நிமிடம் வாகன நிறுத்தப்போராட்டம்- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் அறிவிப்பு

 

சென்னை டிசம்பர் 7, 2021: பெட்ரோல் - டீசல் - எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக டிசம்பர் 10 மாநிலம் முழுவதும் பத்து நிமிடம் வாகன நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்பதை சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். இந்த சந்திப்பின் போது சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், உதவி பொதுச்செயலாளர்கள் வி. குமார், கே.திருச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Youtube Video👇👇

அப்போது அவர் கூறியதாவது:

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றமும் இதனால் ஏற்படும் இதர பொருட்களின் விலையேற்றமும் ஏழை நடுத்தரக்குடும்பங்களை நசித்துவிட்டது. இந்தியப்பொருளாதாரத்தையும் சரித்துவிட்டது.

பெட்ரோலியப் பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயிப்பதை மாற்றி அன்றாட சந்தைவிலையோடு இணைத்தபோது கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பலன் மக்களுக்குக் கிடைக்கும் என்றார்கள். ஆனால் கச்சா எண்ணெய் விலை பாதியாகக்குறைந்தபோதும் கூட மத்திய அரசு கலால் வரியை ஏற்றி அந்தப்பலனை தானே அபகரித்து கொண்டது.

ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூ.33ம். ஒரு லிட்டர் டீசலில் கலால் வரி ரூ.32ம் வசூலிக்கப்படுகிறது. இது போக மாநில வரிகள். மத்திய அரசின் சிறப்பு தீர்வை வசூலிக்கப்படுகிறது. சமையல் எரிவாயுவிற்கு ஒரு வருடத்தில் ரூ.604 லிருந்து ரூ.915 ஆக விலை ஏற்றப்பட்டுள்ளது.

மோடி ஆட்சிக்கு வந்த 2014ல் கலால் வரி மூலம் அரசிற்கு கிடைத்தது ரூ.99,000 கோடி, தற்போது கலால் வரி மூலம் கிடைத்துள்ள ஆண்டு வருமானம் ரூ.3.73 லட்சம் கோடி, 7 வருடங்களில் கலால் வரி வருமானத்தில் 277 சதவீத உயர்வு, இப்படி மக்களிடம் வசூலிக்கப்பட்ட பணந்தான் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி இறைக்கப்படுகிறது.

பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.65க்கும். டீசல் விலையை ஒரு லிட்டர் ரூ.55க்கும் கீழ் குறைக்க வேண்டும். சமையல் எரிவாயுவை ரூ.500க்கும் கீழ் குறைக்க வேண்டும்.

பாகிஸ்தான். பங்களாதேஷில் கூட இவ்வளவு விலை இல்லை. நம்மிடம் பெட்ரோலியத்தை வாங்கி விற்கிற நேபாளத்தில் கூட பெட்ரோலிய விலை நம்மைவிட குறைவு.

பெட்ரோல் டீசல். சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வலியுறுத்தும் விதமான சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து 10 நிமிடம் வாகனங்களை நிறுத்தம் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன.

டிசம்பர் 10ம் தேதி பகல் 12.00மணி முதல் 12.10 வரை 10 நிமிடங்கள் வாகனங்களை ஆங்காங்கே சென்று கொண்டிருக்கும் இடங்களில் அப்படி அப்படியே நிறுத்தி எதிர்ப்பைக் காட்டுவது வாகன உரிமையாளர்களையும், வாகன ஓட்டிகளையும் கேட்டுக் கொண்டார். மேலும் அனைத்து ஜனநாயக இயக்கங்களும், அரசியல் கட்சிகள் இந்தப்போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டிக்கொண்டார்.

****

Popular posts from this blog

ASUS Showcases Gaming & Creator Innovation at ‘Beyond Incredible with ASUS’ Community Event Chennai

JITO Sports National Games 2026 Concludes on a Grand Note in Chennai; Celebrates Sporting Excellence, Youth Empowerment & National Unity

Kauvery Hospital Alwarpet Performs World's First Catheter-Based Treatment for Failing Aortic & Pulmonary Valve