தி ரைஸ் (எழுமின்) அமைப்பு சார்பில் சென்னையில் தமிழர் சங்கமம் | 10ம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு


  • அனைத்துலகத் தமிழர் பொங்கல் மற்றும் பசுமை பூமி கலை, உணவு, பண்பாட்டுத் திருவிழா!
சென்னை, ஜனவரி 2, 2022: தி ரைஸ் (எழுமின்) அமைப்பு எஸ்.ஆர். எம் - பி.ஆர் வர்த்தக குழுமத்தின் ஆதரவுடன் நடத்தும் 10-ம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் - திறனாளர்கள் மாநாடும். தைப்பொங்கல் நிகழ்வுகளும் ஜனவரி 6 முதல் 10 வரை சென்னையில் நடைபெற இருப்பதாக தி ரைஸ் (எழுமின்) நிறுவனர் தமிழ்ப்பணி Fr ம.ஜெகத்கஸ்பர் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

Press meet youtube video👇👇
ஜனவரி 6,7 நாட்களில் கிண்டி ஹில்ட்டன் விடுதியில் நடைபெறும் அனைத்துலக தமிழ்த்தொழிலதிபர்கள்- திறனாளர்கள் மாநாட்டில் சுமார் 25 நாடுகளிலிருந்து வெற்றித் தமிழர்கள் பங்கேற்கிறார்கள். உலகச் சந்தையில் தமது தொழில் வணிகத்தை விரிவு செய்ய விரும்புவோருக்கு இது அரிய வாய்ப்பாகும்.
அனைத்துலக தமிழ் பொறியாளர் மாமன்றம் இம் மாநாட்டில் தொடங்கி வைக்கப்படும். தி ரைஸ் (எழுமின்) அமைப்பு உருவாக்கியுள்ள இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் 2000-ற்கும் மேலான பொறியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தங்களுக்குள் அறிவு - அனுபவங்களைப் பகிர்வதும், தாம் நடத்தும்/ பணி செய்யும் நிறுவனங்களில் தமிழர்களுக்கு தொழில்- வணிக வாய்ப்புகள் உருவாக்கித் தருவதும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான திறன் கற்பித்தலை இளம் பொறியாளர்களுக்குத் தருவதும், இளம்.தமிழ் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆண்டுதோறும் அனைத்துலக வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.

அனைத்துலக தமிழ் மருத்துவப் பணியாளர்கள் மாமன்றம், அனைத்துலக தமிழ்ப் பெண்கள் பெருமன்றம், அனைத்துலக தமிழ் வழக்கறிஞர் மாமன்றம், அனைத்துலக தமிழ் பட்டயக்கணக்காளர்கள் - நிதி மேலாண்மையாளர்கள் மாமன்றம், அடுத்த தலைமுறை இளம் தொழில் முனைவோர் பெருமன்றம் ஆகியவையும் இம்மாநாட்டில் தொடங்கி வைக்கப்படும்.

உலக அளவிலான தமிழ் மருத்துவப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள்,நிதி மேலாண்மையாளர்கள் ஒன்றிணைய மேற்கொள்ளப்படும் முயற்சி இதுவே முதன் முறையாகும். ஆக்கபூர்வமான பல திட்டங்களுக்கு இது வழிவகை செய்யும்.

சிறப்பாக அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் இயக்கம் உலகளாவிய தமிழ் பெண்கள் கூட்டுறவு இயக்கமாக வளர விழைகிறது. ஜனவரி 6,7 நாட்களில் நடைபெறவுள்ள மாநாட்டில் உலகத் தமிழ் பெண் தொழில் முனைவோர் திறனாளர்கள் மாநாடும் நடைபெறுமென்பது தனிச்சிறப்பாகும்.

ஜனவரி 8 ஞாயிறு காலை 8:30 மணிக்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் இணைந்து தீ தூவி பொங்கல் பானைகள் இடும் "உலகத் தமிழர் ஒற்றுமைப் பொங்கல்" நந்தனம் ஒய்-எம்-சி-ஏ மைதானத்தில் நடைபெறும். அதே நாள் மாலை 4:00 மணிக்கு உலகத் தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தியும், வள்ளுவ நெறியை உயர்த்தியும் "தை பொங்கல் தமிழ் நடை" நந்தனம் ஓய்-எம்-சி-ஏ வளாகத்திற்குள் நடைபெறும். அன்று மாலை திறந்த வெளி அரங்கில் தொழில்-வணிகச் சந்திப்புகளும், இயற்கை வேளாண் அங்காடிகள் திறப்பும், ஜல்லிக்கட்டு காளைகளைக் காட்சிப்படுத்ததலும், தமிழர் உணவுத் திருவிழாவும் இடம் பெறும்.

ஜனவரி 8,9,10 நாட்களில் நந்தனம் ஒய்-எம்-சி-ஏ வளாகத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு "பசுமை பூமி - தமிழர் சங்கமம்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது இவ்வாண்டுதை பொங்கல் பொருட்களை இயற்கை வேளாண் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் வாங்குங்கள் என்ற அழைப்பினை இத்திருவிழா முன்வைக்கிறது. ஜனவரி 8, 9 ,10 நாட்களில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நிறுவப்படுகின்றன. தி ரைஸ் அமைப்பும் 'நண்பன்' நிறுவனத்தின் 'இயற்கைகளுக்கான அன்னையர்கள்' மற்றும் 'டார்ப்' என்ற அமைப்பும் இணைந்து பசுமை பூமி இயக்கத்தை நடத்துகின்றன.

உலகெங்கும் தமிழர் உள்ளங்களில் கனன்று கொண்டிருக்கும் அகத் தீயை அறம் நிறை ஆற்றலாக நெறி செய்து உலகப் பரப்பில் தமிழர் தலைநிமிர் காலத்திற்கான சங்கநாதம்முழங்கும் 'தைப்பொங்கல் தமிழர் சங்கமம்' நிகழ்வுகளுக்கு உலகத் தமிழர் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தொழில் -வணிக மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் www.tamilrise.org இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது 91500 60032 எண்களை தொடர்பு கொள்ளலாம். அனைத்துலக தமிழர் பொங்கல் நிகழ்வில் பொங்கல் பானை ஏற்ற விரும்புவோர் 72001 02353 எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம். தொழில்-வணிக மாநாடு தவிர்த்த ஏனைய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நுழைவு கட்டணம் இல்லை.

****

Popular posts from this blog

ASUS Showcases Gaming & Creator Innovation at ‘Beyond Incredible with ASUS’ Community Event Chennai

JITO Sports National Games 2026 Concludes on a Grand Note in Chennai; Celebrates Sporting Excellence, Youth Empowerment & National Unity

Kauvery Hospital Alwarpet Performs World's First Catheter-Based Treatment for Failing Aortic & Pulmonary Valve