மேட்டூர் அனை - சரபங்கா திட்டம்தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர் பிஆர் பாண்டியன் வலியுறுத்தல்

சென்னை, 02.11. 2020:

மேட்டூர் அனை - சரபங்கா திட்டம்

சென்னை உட்பட 25 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் பறிபோகும் காவிரி மேலாண்மை கூட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் பிஆர் பாண்டியன் வலியுறுத்தல் ..

தமிழக அரசு காவிரி உபரி நீர் திட்டம் என்கிற பெயரில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிற்கு எதிராக காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறாமல் மேட்டூர் அணை -சரபங்கா திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது சுயநலத்திற்காக நிறைவேற்ற முயற்சிக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

2015ல் ஜெயலலிதா அவர்களால் கைவிடப்பட்ட திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பது அவருக்கு செய்கிற துரோகம். இதனை கைவிட வேண்டும். 

தடை கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

மூன்று மாதகாலமாக மத்திய அரசாங்கமும் காவிரி மேலாண்மை ஆணையமும் வழக்கிற்கு உரிய பதிலைத் தராமல் காலம் கடத்தி வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் ஜெயின் தலைமையில் இணையம் வழியாக நடைபெற்றது. அக்கூட்டத்தில் உயர்நீதிமன்ற வழக்கிற்கு பதிலளிக்க ஆணையத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட காவிரி சரபங்கா திட்டம் குறித்தான விளக்க கலந்துரையாடலில் பங்கேற்ற கர்நாடக அதிகாரிகள் சரபங்கா திட்டத்தை சட்டவிரோதமாக செயல்படுத்தி புதிய நீர்ப்பாசன பகுதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு சட்டவிரோதமாக ஈடுபடுகிறது என குற்றஞ்சாட்டி இதனை கைவிட வேண்டும். ஏற்க மறுத்தால் கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்டி புதிய நீர் பாசன பகுதிகளை நாங்களும் விரிவாக்கம் செய்வோம் என பேசியதால் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 

எனவே ஆணையக் கூட்டம் குறித்து வெள்ளை அறிக்கையை ஆணைய தலைவர் வெளியிட வேண்டும். 

இதன் மூலம் தமிழக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு துணை போகிறதோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

எனவே இதனை உடனடியாக கைவிட வேண்டும். திட்டம் நிறைவேற்றினால் காவிரி டெல்டாவில் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் அழிவதோடு,5 கோடி மக்களுடைய குடிநீர் ஆதாரம் பறி போகும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தை கைவிட முன்வர வேண்டும் 

மதுரை உயர் நீதிமன்றம் 50 ஆண்டு காலம் போராடி பெற்ற உரிமையை குழி தோண்டி புதைக்க முயற்சிக்கும் தமிழக அரசின் சட்ட விரோத நடவடிக்கைக்கு தடை விதித்து காவிரி டெல்டா விவசாயிகளுக்கு விரைந்து நீதி வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் 

எனவே தமிழக அரசாங்கம் சட்டத்திற்கு உட்பட்டு பாசன நீர் ஆதார உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற விவசாய விரோத சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது பதுக்கல்காரர்களுக்கு ஆதரவானது என்பது வெங்காய உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வெளிவந்திருக்கிறது. இதன் மூலம் மோடி அரசாங்கம் விவசாய சட்டங்களில் தோல்வி அடைந்திருக்கிறது என்பதை பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகிறேன்.எனவே சட்டங்களில் இருக்கிற விவசாயிகளுக்கு விரோதமான 4 சரத்துக்களை மாற்றம் செய்து விவசாயிகளுக்கு பாதுகாப்பாக கொண்டு வரவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

கேரளாவில் 16 வகையான காய்கறிகளை குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து கொள் முதலை உத்தரவாதப் படுத்துகின்றது. தமிழகத்தில் உற்பத்தி செய்யக் கூடிய காய்கறிகள் உணவுப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வதற்கான உத்தரவாதம் அளிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் 50 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே கடன் வழங்கி இருக்கிறது. காவிரி டெல்டாவில் பெரும்பகுதியான விவசாயிகள் கடன் பெற முடியாமல் தவிக்கிறார்கள். புதிதாக மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கி தான் நகைக்கடன் வேளாண் கடன் பெற முடியும் என்று தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது அதனடிப்படையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதற்கான உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு 10 சதவிகிதம் பங்குத் தொகை என்ற பெயரில் கட்டாய வசூல் செய்கிறார்கள்.இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் என்றார்.

மேற்க்கண்டவாறு செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதனை தங்கள் ஊடகம் பத்திரிக்கைகளில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன்.

*****

Recent Posts